தஞ்சை மாவட்டத்தில் 1,700 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
கொரோனா தடுப்பூசி தஞ்சை மாவட்டத்தில் கொரோனா நோயை கட்டுப்படுத்தும் பொருட்டு கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த முகாம்கள் அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் மற்றும் பிற இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது.
முதல் தவணை தடுப்பூசி, 2-ம் தவணை தடுப்பூசி, பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கடந்த 14-ந் தேதி வரை 18 வயது முதல் 59 வயது வரையிலானவர்களுக்கு தனியார் ஆஸ்பத்திரிகளில் உரிய கட்டணத்துடன் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. ஆனால் தற்போது கடந்த 15-ந் தேதி முதல் செப்டம்பர் 30-ந் தேதி வரை 18 வயதுக்கு மேல் 59 வயதிற்குள்ளான பயனாளிகளுக்கு இலவசமாக அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்களில் தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது.
மெகா தடுப்பூசி முகாம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தஞ்சை மாவட்டத்தில் 34-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. 1,700 இடங்களில் நடைபெறும் முகாமில் தகுதியுள்ள அனைவரும் தவறாது கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்தி கொரோனா நோயில் இருந்து தங்களையும், தங்களது குடும்பத்தினரையும் பாதுகாத்து கொள்ள வேண்டும். இந்த முகாம்களில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஈடுபட உள்ளனர். இந்த முகாம் காலை 7 மணிக்கு தொடங்கி, இரவு 7 மணி வரை நடைபெறும்.
இந்த முகாம்கள் மூலம் சுமார் 80 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை இணை இயக்குனர் நமச்சிவாயம் தெரிவித்தார்.